கவுகாத்தி : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக சொந்த மண்ணில் ஆடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரன் சிங் - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

இதில் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடி வீரர் ரூசோவ் களமிறங்கினார். அவர் அதிரடியாக ரன்கள் சேர்த்ததால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 4 ஓவர்களில் 35 ரன்களாக இருந்தது. அப்போது இளம் வீரர் ஆவேஷ் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஆவேஷ் கான் வீசிய 5வது ஓவரில் ரூசோவ் 22 ரன்களிலும், தொடர்ந்து வந்த ஷஷாங்க் சிங் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் பஞ்சாப் அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியது. பின்னர் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, சாஹல் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் கேப்டன் சாம் கரண் - ஜித்தேஷ் சர்மா கூட்டணி இணைந்தது. ஜித்தேஷ் சர்மா வந்த உடனே, அஸ்வின் பவுலிங்கில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். பின்னர் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை சாம் கரண் எடுத்து கொண்டார்.
ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்து செயல்படுத்தினர். இதனால் பஞ்சாப் அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 89 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் அஸ்வின் வீசிய 15வது ஓவரில் 2 சிக்சர்கள் உட்பட 14 ரன்கள் சேர்க்கப்பட, ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கைகள் ஓங்கியது. அப்போது சாஹல் பவுலிங்கில் ஜித்தேஷ் சர்மா 22 ரன்கள் எடுத்து வெளியேற, அஷுதோஷ் சர்மா களம் புகுந்தார். அப்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது.
17வது ஓவரை வீசிய ஆவேஷ் கான் பவுலிங்கில் 8 ரன்கள் சேர்க்கப்பட, சந்தீப் சர்மா வீசிய 18வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனிடையே சிறப்பாக விளையாடிய கேப்டன் சாம் கரண் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட போது, ஆவேஷ் கான் பவுலிங்கில் அபாரமாக 2 சிக்சர்கள் விளாசப்பட்டது. இறுதியாக 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் சாம் கரண் 41 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 63 ரன்களை சேர்த்தார்.