கவுகாத்தி : பஞ்சாப் வீரர் ராகுல் சஹர் பவுலிங்கில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்விட்ச் ஹிட் ஷாட் மூலம் பவுண்டரி அடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி உட்பட 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்து வருகிறார். பவுலிங் மட்டுமல்லாமல் அஸ்வினின் பேட்டிங் திறமையும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, திடீரென களம் புகுந்த அஸ்வின் 19 பந்துகளில் 3 சிக்ஸ் உட்பட 29 ரன்களை விளாசி ஆட்டத்தை போக்கை மாற்றினார். இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் காரணமாக உடனடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். மறுமுனையில் ரியான் பராக் பவுண்டரி அடிக்காமல் நிதானம் காத்த நிலையில், அஸ்வின் வந்த உடன் பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ஹர்ப்ரீத் பராப் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய அஸ்வின், ராகுல் சஹர் வீசிய 12வது ஓவரில் 6, 4, 4 என்று மொத்தமாக 17 ரன்களை விளாசி அசத்தினார்.
அதிலும் சிக்சர் விளாசிய பின் உடனடியாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்விட்ச் ஹிட் ஷாட் மூலம் பவுண்டரி ஒன்றை விளாசி ஆச்சரியம் கொடுத்தார். சிறப்பாக விளையாடிய அஸ்வின் 19 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 28 ரன்களை விளாசினார். இந்த இன்னிங்ஸ் மூலமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை பதிவு செய்தது.
வழக்கமாக ஸ்விட்ச் ஹிட் ஷாட்டிற்கு எதிராக அஸ்வின் பல்வேறு முறை கருத்து தெரிவித்து வந்திருக்கிறார். ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை தடை செய்ய வேண்டும் என்று பேசி வந்த அஸ்வின், திடீரென ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை விளையாடியது ஆச்சரியமளித்தது. அதேபோல் அஸ்வின் ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை விளையாடியதே இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.