கவுகாத்தி : ஐபிஎல் தொடரில் 2013ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், முதல்முறையாக ஒரே சீசனில் 500 ரன்களுக்கு மேல் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் வந்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி வருகிறார். குறிப்பாக சஞ்சு சாம்சனிடம் கன்சிஸ்டன்சி இல்லை என்று விமர்சித்து வந்தனர். அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் அமைந்தது. இதன் காரணமாக 12 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் உட்பட 486 ரன்களை விளாசி இருந்தார்.
2013ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இதுவரை ஒருமுறை கூட 500 ரன்களை குவித்ததில்லை. அதிகபட்சமாக 2021ஆம் ஆண்டு 484 ரன்களையும், 2022ஆம் ஆண்டு 458 ரன்களையும், 2018ஆம் ஆண்டு 441 ரன்களையும் விளாசி இருக்கிறார். இந்த சீசனில் 500 ரன்களை அடிக்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு அமைந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்களை சேர்த்தன மூலமாக 500 ரன்களை எட்டினார். 11 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தில் சஞ்சு சாம்சன் முதல்முறையாக 500 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் காரணமாகவே சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதிரடியாக விளையாட முயன்ற சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இனி வரும் காலங்களில் சஞ்சு சாம்சன் முக்கிய நட்சத்திரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.