சென்னை : பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங், சூர்யகுமார் யாதவை போல் வருவார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது. வழக்கம் போல் இந்த சீசனிலும் பஞ்சாப் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இருப்பினும் அசாத்தியமாக சில போட்டிகளை வென்று பஞ்சாப் அணி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரின் ஆட்டம் பலரையும் ஈர்த்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் அணி குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், பஞ்சாப் அணியின் 3 வீரர்கள் தான் இந்த சீசனில் என் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது ஷஷாங்க் சிங் தான். அவர் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார். நிச்சயம் அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று பலரும் பேசுவார்கள். ஷஷாங்க் சிங் 22 வயது வீரரோ அல்லது 25 வயது வீரரோ கிடையாது. கொஞ்சம் சீனியர் வீரர் தான். உள்ளூர் போட்டிகளில் விளையாடி, நன்றாக அனுபவம் கொண்டவர். கூர்ந்து பார்க்கும் போதும், ஸ்டைலில் சூர்யகுமார் யாதவ் போல் இருக்கிறார்.
சூர்யகுமார் யாதவும் 30 வயதிற்கு மேல் இந்திய அணிக்குள் வந்தவர் தான். அவருக்கு பின் அஷுதோஷ் சர்மா தான் ஈர்த்துவிட்டார். பும்ராவுக்கு எதிராக அஷுதோஷ் சர்மா அடித்த ஸ்வீப் ஷாட் இப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் பஞ்சாப் அணியில் தொடரும் போது நிச்சயம் அடுத்தடுத்த சீசன்களில் பெரும் வளர்ச்சியடைவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த சீசனில் ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் அணி தவறுதலாக ஏலத்தில் வாங்கியது. ஆனால் பஞ்சாப் அணி அவரின் திறமையை அறிந்து முதல் போட்டி முதலே களமிறக்கி வந்தது. சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங், 12 போட்டிகளில் விளையாடி 352 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் பஞ்சாப் அணியில் ஷஷாங்க் சிங் தக்கவைக்கப்படுவார் என்று பார்க்கப்படுகிறது.