ஜெய்ப்பூர் : 2024 ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்தப் போட்டியில் பேட்டிங்கின் போது கடைசி 5 ஓவர்களில் பெரிய அளவில் ரன் குவிக்காமல் சொதப்பியதே பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக விராட் கோலி முதல் ஓவரில் இருந்தே களத்தில் நின்ற போதும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடாமல் அப்போதும் குறைவான பவுண்டரிகளையே அடித்தார்.

தான் ஆடியது தான் சரி என அவர் அந்த இன்னிங்க்ஸ் முடிந்த உடன் பேசியும் இருந்தார். மேலும், 20 ஓவர்களில் பெங்களூரு அணி 183 ரன்கள் குவித்தது போதுமான ஸ்கோர் தான் என கூறி இருந்தார். ஆனால், ராஜஸ்தான் அணி இந்த ஸ்கோரை எளிதாக கடந்து 19.1 ஓவரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டுபிளேசிஸ் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து கூறி மேலும் அதிர்ச்சி அளித்தார். அவர் பேசுகையில், "இந்த பிட்ச் சிக்கலானதாக இருந்தது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது 190 ரன்கள் நல்ல ஸ்கோர் என நினைத்தேன். நாங்கள் கடைசி நேரத்தில் 10 - 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம். விராட் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடினார். விராட்டோ, கிரீனோ அல்லது தினேஷ் கார்த்திக்கோ யாரோ ஒருவர் ரன் குவித்து இருந்தால் நாங்கள் இன்னும் அதிக ஸ்கோர் சேர்த்து இருப்போம். நாங்கள் அதற்கு முயற்சி செய்தோம். ஆனால், பந்துகளை அடிப்பது சவாலாக இருந்தது. ஸ்பின்னர்கள் வீசிய பந்துகளை பேட்டின் அடிப் பகுதியால் தான் அடிக்க முடிந்தது. வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மட்டுமே ரன் குவிக்க முடிந்தது." என்றார்.
இதன் மூலம் விராட் கோலி நன்றாகவே ஆடினார். அவர் அதிரடியாக ஆட முயன்றும் ஸ்பின்னர்கள் ஓவர்களில் ரன் குவிக்க முடியவில்லை என சப்பைக் கட்டு கட்டி இருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் 19வது ஓவரை ராஜஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நான்ரே பர்கர் வீசினார். அந்த ஓவரில் சதம் அடிக்க வேண்டி ஒவ்வொரு ரன்னாக ஓடினார் கோலி. கேமரான் கிரீனும் அவர் சதம் அடிக்க உதவி செய்வது போல பவுண்டரி அடிக்க முயலாமல் ஒற்றை ரன்களாக ஓடினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி. ஆனால், அந்த அணியின் கேப்டன் ஸ்பின்னர்களின் ஓவர்களில் ரன் குவிக்க முடியவில்லை என கூறி இருக்கிறார்.