அகமதாபாத் : விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்வதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ராஜஸ்தான் அணியின் பர்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நடக்கவுள்ள எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றுள்ள நிலையில், ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணியின் கைகளே ஓங்கியிருப்பதாக ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

அதற்கு விராட் கோலியின் எனர்ஜியும் முக்கிய காரணம். ஏனென்றால் விராட் கோலி களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பது அந்த அணி வீரர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. விராட் கோலியை பார்த்து சிராஜ், யாஷ் தயாள், ஸ்வப்னில் சிங் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேபோல் பேட்டிங்கிலும் விராட் கோலி வேறு மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 708 ரன்களை குவித்துள்ளார். இதனால் விராட் கோலியை யாரும் சீண்ட வேண்டாம் என்று ராஜஸ்தான் அணி வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் ஃபெரேரா - பர்கர் இடையிலான உரையாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பர்கர் பேசுகையில், எந்த பேட்ஸ்மேனையும் ஸ்லெட்ஜிங் செய்வதை பெரிதாக ரசித்ததில்லை. ஆனால் இருவருக்கும் இடையிலான போட்டியை எப்போதும் ரசித்திருக்கிறேன். இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது நானும் விராட் கோலியும் மோதலில் ஈடுபட்டதாக பலரும் கருதினர்.
ஆனால் எங்களுக்குள் எந்த ஸ்லெட்ஜிங்கும் நடக்கவில்லை. சாதாரணமாக பார்த்து கொண்டதே பெரிய விஷயமாக மாறியது. ஆனால் விராட் கோலியுடன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டால் நிச்சயம் ஜாலியாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். நானும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி வீரர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.