ஜெய்ப்பூர் : தன்னால் மற்ற வீரர்களை போல் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாட முடியாது என்று ஆர்சிபி அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 8வது ஐபிஎல் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 72 பந்துகளில் 4 சிக்ஸ், 12 ஃபோர்ஸ் உட்பட 113 ரன்களை விளாசினார்.

ஆனாலும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. டி20 கிரிக்கெட்டில் 50 பந்துகளுக்குள் சதம் விளாசினால் மட்டுமே அணிக்கு பயனளிக்கும் என்று பார்க்கப்பட்டு வரும் சூழலில், 67 பந்துகளில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். கடைசி வரை விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 156.94ஆகவே இருந்தது.
இந்த இன்னிங்ஸ் குறித்து விராட் கோலி பேசுகையில், வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்த பிட்ச் வித்தியாசமாக தெரிகிறது. இந்த பிட்ச் பார்ப்பதற்கு பிளாட்டாக இருந்தாலும், பந்து கொஞ்சம் நின்று வருகிறது. குறிப்பாக ஸ்லோயர் பால்கள் நன்றாக நின்று வருகின்றன. அது வேகம் குறைந்த பின்னர் தான் உணர முடிந்தது. எங்கள் இருவரில் ஒருவர் கடைசி வரை நின்று பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.
இந்த ஸ்கோர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். அதேபோல் பேட்டிங் செய்வதற்கு முன் களமிறங்கும் போது எந்தவித முன் தீர்மானமும் என்னிடம் கிடையாது. என்னால் கூடுதல் ஆக்ரோஷத்துடன் விளையாட முடியாது. பவுலர்களை என்ன ஷாட்டை ஆடுவேன் என்ற கணிப்பில் வைத்திருக்க வேண்டும். அதற்கு அனுபவம் தேவையாக உள்ளது.
இந்த பிட்சில் பனிப்பொழிவு இருந்தாலும், கொஞ்சம் உலர்வாகவே உள்ளது. நிச்சயம் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்காது. அஸ்வினின் பந்திற்கு கீழ் சென்று விளையாட முடியவில்லை. அதனால் மிட் விக்கெட் திசையில் ஷாட்கள் அடிப்பது கடினம். அதனால் மைதானத்தில் நேர் திசையில் தான் விளையாட வேண்டிய நிலை இருந்ததாக தெரிவித்துள்ளார்.