ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சதம் அடித்து வீழ்த்தினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர். குறிப்பாக தான் சதம் அடிக்க வேண்டும் என யோசிக்காமல் ஆடினார் பட்லர்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் பட்லர் 94 ரன்களுடன் களத்தில் இருந்தார். அப்போது சிக்ஸ் அடுத்து சதத்தை நிறைவு செய்தார். அந்த வகையில் பட்லர் சுயநல ஆட்டம் ஆடாதது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது.

ஜோஸ் பட்லரின் சதம் இப்போது இத்தனை முக்கியத்துவம் பெற மற்றொரு காரணமும் உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலியும், ஜோஸ் பட்லரைப் போலவே துவக்க வீரராக இறங்கி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று சதம் அடித்தார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் கடைசியில் 157 ஆகவே இருந்தது. கடைசி 5 ஓவர்களில் அவர் அதிரடி ஆட்டம் ஆட முயலவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
ஆனால், அதற்கு நேர்மாறாக ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் அணியின் ரன் ரேட் 9 ரன்களுக்கு மேல் இருப்பதை உறுதி செய்தார். அதே போல ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து சேஸிங்கில் முக்கிய பங்கு வகித்தார்.
தனது நூறாவது ஐபிஎல் போட்டியில் ஆடிய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் சதம் அடித்தார். கடைசி ஓவரில் 1 ரன் தேவை என்ற நிலையில் 94 ரன்களுடன் களத்தில் இருந்த பட்லர், கேமரான் கிரீன் வீசிய பந்தில் சிக்ஸ் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். அப்போது விராட் கோலி அடித்த சதத்தையும், பட்லர் அடித்த சதத்தையும் ஒப்பிட்டு பலரும் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.