அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இந்த தொடர் முழுவதுமே சரியாக விளையாடாமல் தடுமாறி வந்தார். இந்த நிலையில் வாழ்வா? சாவா? என்ற நாக்அவுட் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொண்ட அஸ்வின் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆர் சி பி அணி தோல்வியை தழுவியது. மேலும் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்வின், நடப்பு சீசனில் கடந்த சில போட்டிகளாக நாங்கள் சரியாக விளையாடவில்லை.

ஒரு மைதானத்திற்கு வெற்றிக்கு தேவையான இலக்கை நாங்கள் பெறவில்லை. அது மட்டும் அல்லாமல் ஜாஸ் பட்லர், அணியை விட்டு சென்று விட்டார். எங்கள் அணியின் முக்கிய வீரரான சிம்ரன் ஹெட்மயரும் காயம் அடைந்து விட்டார். இப்படி இருக்கும் போது எந்த அணியினாலும் மீண்டு வருவது கடினமாக தான் இருக்கும். இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது.
சேசிங்கில் நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி நிச்சயம் எங்களுக்கு நம்பிக்கையும் உத்வேகத்தையும் கொடுக்கும். இந்த தொடரின் முதல் பாதியில் என்னுடைய உடல் தகுதி சரியாகவில்லை. என்னால் சரியான முறையில் செயல்பட முடியவில்லை. இதற்கு காரணம் என்னுடைய வயிற்றுப் பகுதியில் காயம் இருந்தது. எனக்கு வயதும் ஆகி வருகிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு டி20 போட்டிக்கு நான் வந்தேன்.
இதனால் என்னுடைய பந்து வீசும் முறையும் மாற்றிக்கொள்ள கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. என்னுடைய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். என் அணிக்கு என்னுடைய பங்களிப்பு மிகவும் தேவை என்பதை உணர்ந்தேன். இதனால் காயம் குறித்து கவலைப்படாமல் என் அணியின் சக வீரர்களுக்காக இந்த தொடரில் விளையாடினேன்.
இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய பவுலர்கள் சரியான முறையில் பந்து வீசினார்கள் அபாரமாக செயல்பட்டார்.அவருக்கு ஆரம்பத்தில் ஸ்விங் மற்றும் சீம் நன்கு கை கொடுத்தது. ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. மேலும் சேசிங்கில் எங்களுடைய வீரர்கள் சில அபாரமான ஷார்ட்களை ஆடினார்கள்.
எங்கள் அணியின் வெற்றிக்கு காரணமே பல இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் கலந்து இருக்கிறார்கள்.தற்போது சிம்ரன் ஹிட்மயர் முழு உடல் தகுதியுடன் வந்திருக்கிறார். ரோமன் பொவெல் இன்று நன்றாக ஆடினார். மேலும் பெஞ்சில் கேசவ் மகாராஜ் அமர்ந்திருக்கிறார்.தற்போது இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்த போட்டிகளுக்கும் நாங்கள் கொண்டு செல்வோம் என்று அஸ்வின் கூறியுள்ளார். காயத்துடன் தான் விளையாடினேன் என்றும் அணிக்காக தான் இதை செய்தேன் என்று உண்மையை ஒப்புக்கொண்ட அஸ்வினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.