ஜெய்ப்பூர் : 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி மாபெரும் மைல்கல் சாதனை ஒன்றை படைத்தார்.
ஐபிஎல் தொடரில் 7500 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறார் விராட் கோலி. வேறு எந்த வீரராலும் இன்னும் 7000 ரன்களையே கடக்க முடியாத நிலையில் விராட் கோலி 7500 ரன்களை கடந்து சாதனை மன்னனாக தன்னை மீண்டும் நிரூபித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக ஃபாப் டுபிலேசிஸ் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணியை திணற வைத்தனர். டுபிலேசிஸ் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அபாரமாக ஆடிய விராட் கோலி 2024 ஐபிஎல் தொடரில் மூன்றாவது ஐபிஎல் அரைசதத்தை கடந்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் 7500 ரன்கள் என்ற பெரிய மைல்கல்லையும் கடந்தார் அவர். பின்னர் 67 பந்துகளில் சதம் அடித்தார் விராட் கோலி. இதுவே ஐபிஎல் தொடரில் மிக அதிக பந்துகளில் அடிக்கப்பட சதம் ஆகும். மற்ற பெங்களூரு வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் கோலி முதல் பந்தில் இருந்து கடைசி ஓவர் வரை களத்தில் நின்று சதம் கடந்து சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினார். 72 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்தார் கோலி. பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது.
என்னதான் விராட் கோலி சாதனைகள் செய்தாலும், சதம் அடித்தாலும் பெங்களூரு அணி எடுத்த ரன்கள் போதுமானது அல்ல. 200 ரன்களை எட்டி இருந்தால் ராஜஸ்தான் அணிக்கு அழுத்தம் கொடுத்து இருக்கலாம். ஆனால், 183 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் அதிரடி சதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். விராட் கோலியின் நிதான சதம் பெங்களூரு அணியின் வெற்றி வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டது.