சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் கடந்த 2020 முதல் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று வருபவர். அதன் காரணமாக மட்டுமே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்படவில்லை.
மாறாக 2020 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் போட்டியில் விளையாடும் முன்பே அவரைக் குறித்து அனைவரும் வியந்து போன சம்பவம் ஒன்று நடைபெற்றதாக குறிப்பிட்டு இருக்கிறார் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி. அப்போதே ருதுராஜ் கெய்க்வாட்டுக்குள் ஏதோ ஒன்று இருப்பதாக சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் இருப்பவர்கள் பேசி உள்ளனர்.

2020 ஐபிஎல் தொடர் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகளால் துபாயில் நடைபெற்றது. அப்போது ருதுராஜ் கெய்க்வாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சுமார் 32 நாட்கள் அவர் கொரோனாவில் சிக்கித் தவித்தார். அந்த 32 நாட்களும் தனிமையில் இருந்ததோடு, பல முறை அவருக்கு கொரோனா தொற்று நீங்கி விட்டதா என பரிசோதிக்கப்பட்டு அதில் தொற்று மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு சோர்ந்து போயிருக்கிறார்.
அது குறித்தும், ருதுராஜ் கெய்க்வாட் அதன் பின் எப்படி எடை குறைந்து போன நிலையில் பேட்டிங் செய்தார் என்பது குறித்தும் பேசினார் மைக் ஹஸ்ஸி. "எங்கள் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற ஒருவரை நான் விரும்புகிறேன். இந்த இளம், ஒல்லியான சிறு குழந்தையாக அவர் முதலில் சிஎஸ்கே அணிக்கு வந்தபோது நான் அவரைப் பார்த்திருக்கிறேன். 2020 ஐபிஎல் தொடருக்காக துபாயில் நாங்கள் இருந்தபோது அவருக்கு கோவிட் வந்தது எனக்கு நினைவிருக்கிறது. மேலும் அவர் 32 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் கொரோனா சோதனையை தொடர்ந்தார். தொடர்ந்து சோதனை செய்தார்” என்றார்.
மேலும், "பாவம் அவர். அதன் பின் அவர் வெளியே வந்தார். அதன் பிறகு அவனது முதல் வலைப் பயிற்சியில் நான் அவரைப் பார்த்தேன். "ஆஹா, இந்தக் பையனிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது" என்று நான் நினைத்தேன்” என்று ஹஸ்ஸி கூறினார்.
மேலும், "அவர் ஓரிரு போட்டிகளில் விளையாடினார். அவர் அதிக ரன்கள் எடுக்காததால், மீண்டும் அணியில் இருந்து வெளியேறினார். ஆனால் அங்கே ஏதோ ஒரு விசேஷம் இருப்பதாக எனக்குத் தெரியும். அவர் அணியில் இருந்து விலகி பேட்டிங்கை மேம்படுத்த பயிற்சி செய்தார். நிச்சயமாக, ஐபிஎல்லின் கடந்த சில சீசன்களில் அவரிடம் நாங்கள் பார்த்தது தனித்துவமான ஆட்டம்” என்று ஹஸ்ஸி கூறினார்.