முல்லான்பூர் : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தோனியாக மாறி போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். அந்த காட்சிகள் தோனி ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி முல்லான்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி துவக்கத்தில் விக்கெட்களை இழந்த போதும் கடைசி 5 ஓவர்களில் அதிரடி பேட்ஸ்மேன்கள் லியாம் லிவிங்க்ஸ்டன் மற்றும் அசுதோஷ் சர்மா களத்தில் இருந்தனர்.

அப்போது சாஹல் வீசிய ஓவரில் அசுதோஷ் சர்மா பந்தை தட்டி விட்டு ஒரு ரன் ஓடினார். லியாம் லிவிங்க்ஸ்டன் இரண்டாவது ரன் ஓட சிறிது தூரம் முன்னேறினார். ஆனால், அசுதோஷ் சர்மா ரன் ஓட வேண்டாம் என மறுத்தார். இதை அடுத்து லிவிங்க்ஸ்டன் மீண்டும் கிரீஸை நோக்கி ஓடினார். அப்போது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் பந்தை சில அடி தூரம் முன்னே பிடித்தார். அதே சமயம் லிவிங்க்ஸ்டன் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்ததால் ஸ்டம்ப்பை பார்க்காமல் பந்தை வாங்கி அப்படியே ஸ்டம்ப்பை நோக்கி எறிந்தார். லிவிங்க்ஸ்டன் கிரீஸை அடையும் முன்பே பந்து ஸ்டம்ப்பில் பட்டது. லிவிங்க்ஸ்டன் ரன் அவுட் ஆனார்.
முன்பு தோனி தான் இது போன்ற ரன் அவுட்களை செய்வார். அவரைப் பின்பற்றி இப்போது பல அணிகளின் விக்கெட் கீப்பர்களும் ஸ்டம்ப்பை பார்க்காமல் ரன் அவுட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் சஞ்சு சாம்சன் செய்த இந்த ரன் அவுட்டால் அதிரடி வீரர் லிவிங்க்ஸ்டன் ஆட்டமிழந்தார். அதன் மூலம் பஞ்சாப் அணியின் ஸ்கோர் பெரிய அளவில் உயராமல் பார்த்துக் கொண்டது ராஜஸ்தான் அணி.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.