ஜெய்ப்பூர் : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த தவறால் பிசிசிஐ அவருக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அடுத்து ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். அதன் பின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங் செய்தது. 197 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணியால் சேஸிங் செய்ய முடியாது என்றே பலரும் எண்ணினர்.
17 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி 3 ஓவர்களில் 42 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது குஜராத் அணி. அப்போது களத்தில் ராகுல் டெவட்டியா மற்றும் ரஷித் கான் பேட்டிங் செய்தனர்.
அவர்கள் இருவரும் 19வது ஓவரில் 20 ரன் சேர்த்ததோடு, கடைசி ஓவரில் 17 ரன்கள் சேர்த்து போட்டியில் குஜராத் அணியை வெற்றி பெற வைத்தனர். குஜராத் அணி சேஸிங்கில் கடைசி ஓவர் வரை பரபரப்பை ஏற்படுத்தியதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் நிறுத்தவும், பந்துவீச்சாளர்களுடன் ஆலோசிக்கவும் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார்.
அதனால், முதல் 19 ஓவர்களை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அந்த அணியால் வீசி முடிக்க முடியவில்லை. இதை அடுத்து விதிப்படி கடைசி ஓவரை வீசும் முன் அம்பயர் கூடுதலாக ஒரு ஃபீல்டரை உலகக்கோப்பை வட்டத்துக்குள் நிற்குமாறு கூறினார். இதனால் பவுண்டரி எல்லையில் ஒரு ஃபீல்டர் குறைவாக நிற்க வேண்டிய நிலை ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்டது. குஜராத் அணி கடைசி ஓவரில் மூன்று பவுண்டரி அடித்து வெற்றி பெற்ற நிலையில் ஓவர்களை தாமதமாக வீசியதே அதற்கு காரணமாக அமைந்தது.
இந்த தவறால் போட்டியில் தோல்வி கிடைத்த நிலையில், மேலும் ஒரு அடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் போட்டி விதிப்படி எந்த அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லையோ அந்த அணியின் கேப்டனுக்கு தண்டனை அளிக்கப்படும். அந்த வகையில் சஞ்சு சாம்சனுக்கு தண்டனை கிடைத்துள்ளது.