சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து பாதி ஆட்டங்களுடன் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் புறப்படவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி ஷமார் ஜோசப்பை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 26ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின், அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் டெஸ்ட் அணியில் இல்லாத வீரர்கள் ஃபார்முக்கு வர ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.

இதனால் பிப்ரவரி இறுதி வாரத்திலேயே ஐபிஎல் ஃபீவர் ரசிகர்களிடையே தொடங்கிவிடும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதால், முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடக்கவுள்ளது. இதனால் முதல் போட்டியிலேயே தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே சிஎஸ்கே அணிக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி சார்பாக முஷ்டாஃபிகுர் ரஹ்மான் ரூ.2 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மே 11ஆம் தேதி வரைக்கும் வங்கதேச அணி நிர்வாகம் என்ஓசி வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் கடைசி கட்ட லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் ஹேசல்வுட் விளையாட தயாராக இருக்கிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஹேசல்வுட் விளையாடி இருக்கிறார் என்பதால், அவரை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் சாதித்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமார் ஜோசப்பை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
வழக்கமாக நல்ல உயரம் கொண்ட ரபாடா மாதிரியான வேகப்பந்துவீச்சார்களை சிஎஸ்கே அணி வாங்க முயற்சிக்கும். அந்த வகையில் ஷமார் ஜோசப்பிடம் இருக்கும் வேகம் மற்றும் யார்க்கர் வீசும் திறமையை மனதில் வைத்து அவரை வாங்க முயற்சிக்கலாம். இவர் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட போதும், எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.