கொல்கத்தா : ஆல் - ரவுண்டர் ஷர்துல் தாக்குரை கடந்த 2023 ஐபிஎல் தொடரில் 10.75 கோடிக்கு மற்றொரு அணியிடம் இருந்து நேரடியாக வாங்கி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு நேரடியாக மற்றொரு அணியிடம் இருந்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷர்துல் தாக்குர். ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்துக்கும், அவரின் செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு ஷர்துல் தாக்குரும் ஒரு முக்கியமான காரணம். அந்த தொடரில் அவர் 11 போட்டிகளில் ஆடி அதில் 113 ரன்கள் மட்டுமே அடித்தார். மேலும், வெறும் 7 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார்.

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஷர்துல் தாக்குர் சொதப்பி இருந்தார். பவுலிங்கில் பெரிய அளவில் விக்கெட் எடுக்காமல் போனாலும், கொடுமையாக ரன்களை வாரி வழங்கி இருந்தார். கடந்த சீசனில் 21 ஓவர்கள் பந்து வீசி அதில் 220 ரன்கள் கொடுத்து இருந்தார். அதாவது சராசரியாக ஒரு ஓவருக்கு 10.48 ரன்கள் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், ஷர்துல் தாக்குரை விரும்பி வாங்கிய ஒரே சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை அணியில் இருந்து விடுவித்து இருக்கிறது. அவர் இனி ஏலத்துக்கு வந்து விடுவார். 2024 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வேறு அணிகள் ஷர்துல் தாக்குரை வாங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீபத்தில் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்ற ஷர்துல் தாக்குர் அதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்போதும் ரன்களை வாரிக் கொடுத்து வந்தார். முன்னதாக 2018 முதல் 2021 வரை ஷர்துல் தாக்குர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போதும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பின்னர் 2022 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணியால் 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார். பின்னர் அந்த அணியால் கொல்கத்தா அணிக்கு விற்கப்பட்டார் ஷர்துல். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அவரை வெளியேற்றி இருக்கிறது.