மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது இந்த நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் சீனியர் வீரர்கள் தற்போது பயிற்சியை தொடங்கியிருக்கிறார்கள். தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் தற்போது கிரிக்கெட் வர்ணனை செய்து வந்த நிலையில் ஷிகர் தவான் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்காக இருவரும் தற்போது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் டி ஓய் பாட்டில் டி20 கோப்பை தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் ஷிகர் தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் டி ஒய் பாட்டில் ப்ளூ அணிக்காக விளையாடினார்கள். டாட்டா ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் முதலில் ப்ளூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து டாட்டா ஸ்போர்ட்ஸ் கிளப் பணி வீரர்கள் அபூர்வா வான்கடே 83 ரன்களும் விளாசினர்.

இதன் மூலம் டாட்டா ஸ்போர்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ப்ளூ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் அபிஜித் தோமர் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். பொறுப்பாக விளையாடிய ஷிகர் தவான் 28 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடாமல் களமிறங்கிய முதல் போட்டியிலேயே தவான் பட்டையை கிளப்பினார். எனினும் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே டக் ஆகி வெளியேறினார். இதன் காரணமாக இருபது ஓவர் முடிவில் டி ஓய் பாட்டில் புளு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.