சென்னை : பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஓய்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 6 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை விளாசியுள்ள ஷிகர் தவான், முதல் சீசனில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ரூ.8.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, கேப்டன் பொறுப்பையும் ஏற்றார்.

ஆனால் கடந்த சீசனில் காயம் காரணமாக 11 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஷிகர் தவான், இந்த சீசனில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதனால் பஞ்சாப் அணி இளம் வீரர் சாம் கரண் தலைமையிலேயே பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கியது. இதனால் ஷிகர் தவான் மீதான விமர்சனங்கள் அதிகரித்தது.
இதுகுறித்து ஷிகர் தவான் பேசுகையில், எனது வாழ்க்கை இப்போது மாற்றமடைந்து வருகிறது. அதேபோல் கிரிக்கெட் வாழ்க்கையும் கடைசி கட்டத்தில் உள்ளது. புதிய விஷயங்களும் நடக்கவுள்ளன. விளையாட்டு வீரர்கள் குறிப்பிட்ட காலம் வரை தான் விளையாட முடியும். இன்னும் ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள் அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தான் விளையாட முடியும் என்று நினைக்கிறேன்.
இந்த சீசனில் காயமடைந்ததால், முழுமையாக விளையாட முடியவில்லை. அதனால் 5 போட்டிகளில் மட்டுமே பஞ்சாப் அணிக்கு பங்களிக்க முடிந்தது. அதேபோல் காயத்தில் இருந்து குணமடைய கொஞ்சம் நேரம் தேவைப்படும். இன்னும் 100 சதவிகிதம் முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை என்று தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில் பஞ்சாப் அணியால் ஷிகர் தவான் தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியின் ஆலோசகராகவும் ஷிகர் தவான் தொடர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஷிகர் தவானின் ஓய்வு அறிவிப்பு விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.