சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் சராசரியாக ஆடி வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய வீரர் யார் என்ற புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளை வீழ்த்தியது. அடுத்து டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வி அடைந்தது. இந்த இரண்டு தோல்விகளுக்கும் காரணம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சரியாக இல்லாதது தான்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய வீரராக இருப்பது யார்? என்பது குறித்த புள்ளி விவரம் ஒன்றில் சிவம் துபேவின் அசாதாரண செயல்பாடு பற்றி தெரிய வந்துள்ளது.
சிவம் துபே சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேனாக களமிறங்கி வருகிறார். சிஎஸ்கே அணிக்காக அவர் இதுவரை 541 பந்துகளை சந்தித்து இருக்கிறார். அதில் 61 சிக்ஸ் மற்றும் 43 ஃபோர் அடித்து இருக்கிறார் சிவம் துபே. அதாவது ஒவ்வொரு ஐந்து பந்துக்கும் ஒரு பவுண்டரி அடித்து இருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வரும் சிவம் துபே பெரும்பாலும் பவர் பிளேவின் முடிவில், அதாவது ஆறாவது ஓவருக்கு பின் தான் களமிறங்குகிறார். பவர் பிளே முடிந்த பின் 15 வது ஓவர் வரை ரன் குவிப்பது கடினமாக இருக்கும். ஆனால், அது போன்ற சூழ்நிலையில் தான் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டு ரன் குவித்து இருக்கிறார்.
தற்போது சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில் சிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்டால் அணியின் பேட்டிங் படுமோசமாக மாற வாய்ப்பு உள்ளது. உதாரணத்துக்கு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் எல்லாம் பவுண்டரி அடிக்கவே திணறிக் கொண்டு இருந்த போது சிவம் துபே 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.