சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே அடுத்து இந்திய அணியில் இடம் பெற்று 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடிய சிவம் துபே 148 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் கிரேட் 160ஆக உள்ளது. கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சிவம் துபே சிறப்பாக ஆடி இருந்தார். அதனை அடுத்து அவருக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரிலும் சிறப்பாக ஆடி இருந்தார்.

அதைத் தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் சிவம் துபே அதிரடி ஆட்டத்தால் பட்டையைப் கிளப்பி வருகிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே அவர் தடுமாறினார். மற்ற மூன்று போட்டிகளில் இரண்டு முறை 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார்.
தற்போது இந்திய டி20 அணியில் முக்கிய வீரர்களாக இடம் பெற இருக்கும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, கே எல் ராகுல் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் வைத்துள்ள ஸ்ட்ரைக் ரேட்டை விட சிவம் துபேவின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக உள்ளது. அந்த வகையில் அவர்களைக் காட்டிலும் சிவம் துபேவுக்கு இந்திய அணியின் இடம் கொடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக் போன்றோர் கூறி உள்ளனர்.
சிவம் துபே இடது கை பேட்ஸ்மேன் என்பதால் மிடில் ஆர்டரில் கூடுதல் இடது கை பேட்ஸ்மேன் தேவை என்றால் சிவம் துபேவுக்கு அணியில் இடம் கிடைக்கும். மேலும், அவர் வேகப் பந்துவீச்சாளராகவும் செயல்படுவார். சிஎஸ்கே அணி அவரை பந்துவீச்சாளராக பயன்படுத்தாத போதும் அவரை ஆப்கானிஸ்தான் தொடரில் வேகப் பந்துவீச்சாளராக பயன்படுத்தி இருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அந்த வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரராகவும் இருக்கிறார் சிவம் துபே.