CSK : தோனியின் பவர்.. பார்த்து மிரண்டு போன சிவம் துபே.. தமிழக கல்லூரியில் நடந்த சம்பவம்
வேலூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சிவம் துபே தமிழகத்தில் உள்ள வேலூர் கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசத் துவங்கிய போது மாணவர்கள் செய்த செயலைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனார் சிவம் துபே.
2024 ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதற்கான பயிற்சியை துவக்க உள்ளது. மார்ச் 22 அன்று 2024 ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மோத உள்ளது சிஎஸ்கே அணி. முக்கிய வீரர்கள் தவிர்த்து பிற வீரர்கள் முதற்கட்டமாக பயிற்சி செய்ய துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சில வீரர்கள் காயத்தில் சிக்கி உள்ளனர். நியூசிலாந்து வீரரான டெவான் கான்வே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

அதே போல சிவம் துபேவும் காயத்தில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் வேலூரில் உள்ள விஐடி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அங்கு அவர் பேசத் துவங்கும் முன் மாணவர்கள் இடைவிடாது "சிஎஸ்கே, சிஎஸ்கே" எனவும், "தோனி, தோனி" எனவும் முழக்கமிட்டனர்.
அதைப் பார்த்து சில நிமிடங்கள் பேச முடியாமல் திகைத்து நின்றார் சிவம் துபே. பின்னர் மாணவர்கள் அனைவரும் சிஎஸ்கேவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததை நிச்சயம் சக சிஎஸ்கே வீரர்களிடம் கூறுவேன் என்றார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. பொதுவாக சினிமா நட்சத்திரங்களுக்கு இது போல ரசிகர்கள் கோஷமிடுவார்கள்.
உதாரணமாக சில ஆண்டுகள் முன்பு சென்னையில் நடைபெற்ற சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான், நடிகர் அஜித் குமார் பெயரை கூறிய உடன் சுமார் 2 - 3 நிமிடங்களுக்கு ஆர்ப்பரிப்பு அடங்காமல் இருந்தது. அதனால் ஷாரூக் கான் பேச முடியாமல் திணறினார். கிட்டத்தட்ட அதே போன்ற நிலையில் தான் இருந்தார் சிவம் துபே.


Click it and Unblock the Notifications