மும்பை : 2024 ஐபிஎல் ஏலத்தில் 5.8 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சுபம் துபே. தற்போது தனக்கு கிடைத்த பணத்தில் குடும்பத்துக்கு வீடு வாங்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் அவர்.
உள்ளூர் போட்டிகளில் சுபம் துபே அதிரடி ஆட்டத்தால் கலக்கி வந்தார். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தொடர்ந்து ரன் குவித்தார். அதை விட இடது கை பேட்ஸ்மேன் ஆன அவரது ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது.

அவரது திறமையை பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலத்தில் போட்டி போட்டு 5.8 கோடி கொடுத்து வாங்கியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாராவும் இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், சுபம் துபேவின் முக்கியதுவத்தை உணர்ந்த அவர் ராஜஸ்தான் அணிக்காக அவரை வாங்கினார்.
சுபம் துபே குஜராத் மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர். எளிய பின்னணியை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை "பான் பீடா" கடை நடத்தி, பெரிய வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தி இருக்கிறார். பின்னர் பல்வேறு வேலைகளுக்கு சென்று இருக்கிறார். சுபம் துபேவின் இரட்டை சகோதரர் வேலைக்கு சென்று, கிரிக்கெட் ஆட தேவையான உபகரணங்களை வாங்க உதவி இருக்கிறார்.
இப்படி தனக்காக கஷ்டப்பட்ட குடும்பத்தினருக்கு தற்போது கிடைத்துள்ள 5.8 கோடியை வைத்து வீடு வாங்க முடிவு செய்து இருக்கிறார் சுபம் துபே. இது பற்றி அவர் கூறுகையில், "அவர்களுக்கு தேவையான வசதிகளையும், மகிழ்ச்சியையும் கொடுக்க விரும்புகிறேன். எனவே, முதலில் ஒரு வீட்டை அவர்களுக்கு வாங்க இருக்கிறேன்" என்றார்.