சென்னை : புதிய கேப்டன் சுப்மன் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தாலும், அடுத்து நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணியின் வரலாற்றிலேயே இது மோசமான தோல்வி ஆகும்.
கேப்டன் ஆன உடன் இரண்டாவது போட்டியிலேயே தனது அணிக்கு மோசமான தோல்வியை பெற்றுத் தந்து இருக்கிறார் சுப்மன் கில். இந்த சோகம் முடிவதற்குள் பிசிசிஐ அடுத்த இடியை இறக்கி இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீசும் போது கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.

ஐபிஎல் தொடரில் பந்து வீசும் போது எந்த அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறதோ அந்த அணியின் கேப்டனின் சம்பளத்தில் அபராதம் பிடித்தம் செய்யப்படும். முதல் முறை இந்த தவறு நடக்கும் பட்சத்தில் 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில் சுப்மன் கில் சம்பளத்தில் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்த நிலையில் அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. இந்த பெரிய தோல்வியின் காரணமாக குஜராத் அணியின் நெட் ரன் ரேட் பாதாளத்துக்கு சரிந்துள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வென்ற குஜராத் அணி அடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் நெட் ரன் ரேட் -1.425 என்ற அளவிற்கு சென்றுள்ளது.
இனி வரும் போட்டிகளில் பெரிய வெற்றிகள் பெற வேண்டும். ஒருவேளை தோல்வி அடைந்தால் கூட குறைவான ஸ்கோர் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். அப்போது தான் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்புகளை உருவாக்க முடியும்.