மும்பை : 2024 ஐபிஎல் ஏலத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு இளம் வீரர் என்றால் அது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த குமார் குசாக்ரா. அவரை அந்த ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7.20 கோடி கொடுத்து வாங்கி இருந்தது.
குமார் குசாக்ராவை டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்துக்கு முன் முன்னோட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார். அதில் ஒவ்வொரு இளம் வீரரையும் தங்கள் திறமையை காட்ட வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன குமார் குசாக்ராவின் பேட்டிங் திறமை மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையை டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி பார்த்து இருக்கிறார்.

அப்போதே அவரை அழைத்து பாராட்டி இருக்கிறார். மேலும், குமார் செய்த மின்னல் வேக ஸ்டம்பிங்கை சுட்டிக் காட்டி அவரது கீப்பிங் திறமை தோனியுடைய கீப்பிங் போலவே இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும், அவரை டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் நிச்சயம் எடுக்கும் எனவும், அவருக்காக ஏலத்தில் 10 கோடி வரை டெல்லி கேபிடல்ஸ் அணி செலவு செய்ய தயாராக இருக்கும் எனவும் கூறி இருக்கிறார்.
இந்த முன்னோட்டத்துக்கு முன்னதாக விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் அவர் 37 பந்துகளில் 67 ரன்கள் குவித்து இருந்தார். அதற்கு முன் 2021-22 ரஞ்சி ட்ராபி தொடரில் 266 ரன்கள் குவித்து முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 250 ரன்களுக்கும் மேல் குவித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். இந்த நிலையில், தான் டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை முன்னோட்டத்துக்கு அழைத்து இருந்தது, அங்கே கங்குலி அவருக்கு வாக்கு அளித்து இருந்தார்.
என்னதான் கங்குலி 10 கோடி வரை கொடுப்போம் எனக் கூறி இருந்தாலும், ஏலத்தில் அவரது அடிப்படை விலையான 20 லட்சத்துக்கே டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் ஜார்கண்ட் வீரர் குமார் குசாக்ரா பெயர் அறிவிக்கப்பட்ட உடன் முதல் அணியாக ஏலம் கேட்டது டெல்லி கேபிடல்ஸ் அல்ல. அது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தன் மாநிலத்தை சேர்ந்த சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் அவரை ஏலத்தில் வாங்குமாறு சிஎஸ்கே நிர்வாகிகளிடம் கூறி இருக்கிறார். அதனால், அந்த அணியும் வரை வாங்க போட்டி போட்டது. ஆனால், சிஎஸ்கே அணியிடம் அப்போது 3 கோடிக்கும் குறைவாகவே கையிருப்பு இருந்ததால் ஒரு அளவுக்கு மேல் ஏலத்தில் போட்டி போட முடியவில்லை.
ஆனால், டெல்லி அணி மற்ற அணிகளுடன் போட்டி போட்டு 7.20 கோடிக்கு குமார் காசாக்ராவை வாங்கியது. கங்குலி குட்டி தோனிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.