ஐதராபாத் : ஐதராபாத் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பேட் கம்மின்ஸ், இந்தியாவின் இளம் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களால் கூட ஐதராபாத் அணி உரிமையாளர்களை வெற்றிகளால் திருப்தி செய்ய முடியவில்லை. இதனால் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் இருவரையும் அந்த அணி நிர்வாகிகள் ஏலத்தில் விடுவித்தனர். இதனை தொடர்ந்து கடந்த சீசனில் எய்டன் மார்க்ரம் கேப்டனாக பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.

எஸ்ஏ20 லீக்கில் 2 சீசன்களில் 2 முறை கோப்பையை வென்ற போது, ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மார்க்ரம் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது இடத்திற்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அழைத்து வரப்பட்டுள்ளார். ரூ.20.75 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸை வாங்கியதற்கு பின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியும் முக்கிய காரணம்.
ஐபிஎல் ஏலத்திற்கு பின் ஐதராபாத் அணியை பலமாக காணப்பட்டாலும், பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் ரசிகர்களே திண்டாடி வருகின்றனர். ஏனென்றால் எந்த வீரருக்கு யார் பேக் அப் என்ற வரைமுறையின்றி பணத்தை கொட்டி நட்சத்திர வீரர்களாக தூக்கியுள்ளனர். இந்த நிலையில் ஐதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், முதல் போட்டியில் வெற்றிபெற்று சீசனை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்று கொஞ்சம் திட்டமிட்டு வருகிறோம். டி20 கிரிக்கெட் போட்டியில் வெல்வது சாதாரணம் கிடையாது. கேகேஆர் அணியும் மிகச்சிறந்த அணியாக உள்ளது. ஆனால் சீசனின் தொடக்கத்திலேயே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஐதராபாத் அணியில் அனுபவமும், இளமையும் சரிவர கலந்து இருக்கிறது. புவனேஷ்வர் குமார், மார்க்ரம், கிளாஸன் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோல் அபிஷேக் சர்மா, உம்ரான் மாலிக் போன்ற சுவாரஸ்யமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். எனது கேப்டன்சி ஸ்டைல் என்பது புதிய வீரர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்து அவர்களை புரிந்து கொள்வேன்.
புதிய வீரர்களுக்கு என்ன தேவை, களத்தில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். அதேபோல் பயிற்சியாளர்களிடமும் தொடர்ந்து ஆலோசனை செய்வேன். அதன்பின் எனக்கு சரியென தோன்றும் முடிவுகளை சுதந்திரமாக எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 1.35 லட்சம் ரசிகர்களையும் அமைதியாக்குவேன் என்று சொல்லி வைத்து செய்ததை போல், ஐபிஎல் தொடரிலும் சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.