ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ள லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்ட்டியில் தோல்வி அடைந்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் பெரும் சரிவை சந்திக்கும். எனவே, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி நடக்க உள்ளப் பிட்ச்சில் சன்ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக பெரிய மாற்றம் நடந்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழாவது இடத்தில் உள்ளது. இதுவரை 3 போட்டிகளில் பங்கேற்று ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது அந்த அணி. சிஎஸ்கேவைப் பொறுத்தவரை மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் தோல்வி அடையக் காரணமே பிட்ச் தான்.

முதல் இரண்டு போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியது சிஎஸ்கே அணி. அந்தப் போட்டிக்கான பிட்ச்கள் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. சிஎஸ்கே அணி வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி அந்த இரண்டு போட்டியிலும் வெற்றி தேடித் தந்தனர். ஆனால், மூன்றாவதாக விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியின் பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. பந்து பிட்ச் ஆன பின் இரண்டு விதமாக பவுன்ஸ் ஆனது. அதை புரிந்து கொள்ள முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறியதால் அந்த அணி தோல்வி அடைந்தது,
இந்த நிலையில் சிஎஸ்கே அணியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கருப்பு நிற மண் கொண்ட பிட்ச்சை தயார் செய்துள்ளது. இது போன்ற பிட்ச்களில் பந்து சற்று தாமதமாகவே பேட்டிற்கு வரும். எனவே, ஸ்பின்னர்கள் மற்றும் கட்டர் வகை பந்து வீசும் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். பேட்ஸ்மேன்கள் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு அடித்து விட முடியாது.
இதே மைதானத்தில் தான் எட்டு நாட்களுக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து இருந்தது. ஆனால், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இரு அணிகளுமே 200 ரன்களை தொடுவது கடினம் என்றே கூறப்படுகிறது. எனினும், இரண்டு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். முதலில் பேட்டிங் செய்யும் அணி கடைசி 5 ஓவர்களில் தங்களின் அதிரடி பேட்டிங் வரிசையை வைத்து அதிக ரன்கள் குவித்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.