ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி பந்து வீசிய போது இரண்டாவது பந்திலேயே விக்கெட் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சொதப்பி தவறவிட்டார் மொயீன் அலி
அதன் பின் சிஎஸ்கே அணிக்கு பந்துவீச்சின் போது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. மொயீன் அலி தவறவிட்ட கேட்ச் வாய்ப்பு சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒரு ஆரம்பமாக இருந்தது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. சிவம் துபேவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறினர். அவரைத் தவிர எந்த பேட்ஸ்மேனும் 150 ஸ்ட்ரைக் ரேட்டை தொடவில்லை. இதை அடுத்து சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
ஹைதராபாத் அணியில் நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் இது மிகக் குறைவான ஸ்கோராக கருதப்பட்டது. எனவே, சிஎஸ்கே அணி விரைவாக விக்கெட் வீழ்த்துவதே வெற்றிக்கான ஒரே வழியாக இருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் ஆடத் துவங்கிய போது தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை ட்ராவிஸ் ஹெட்சந்தித்தார். அந்த பந்தை அவர் அடிக்க முயன்ற போது பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்று இருந்த மொயீன் அலி கைகளுக்கே வந்தது. ஆனால், மொயீன் அலி தடுமாறி அந்த கேட்ச்சை நழுவ விட்டார்.
முதல் ஓவரிலேயே அதிரடி பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை மொயீன் அலி தவற விட்டதால் சிஎஸ்கே ரசிகர்கள் மூச்சடைத்துப் போய் நின்று இருந்தனர். அதன் பின் துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா அதிரடியின் உச்சத்துக்கு சென்றனர். குறிப்பாக அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அப்போதே சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதியானது. சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.