டெல்லி : லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபத்தை வெளிப்படுத்திய பின் கேப்டன் கேஎல் ராகுல் யாரிடமும் பேசாமல் அமைதி காத்து வருவது தெரிய வந்துள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அடைந்த தோல்வியால் அதிருப்தியடைந்த அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கேஎல் ராகுலை மைதானத்தில் வைத்தே விளாசி தள்ளினார். ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த லக்னோ, தற்போது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இதனால் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே கடினம் என்று பார்க்கப்படும் நிலையில், கேப்டன் கேஎல் ராகுலிடம் கைகளை உயர்த்தி ஆவேசமாக பேசினார் சஞ்சீவ் கோயங்கா. இந்த வீடியோ நேரலையில் ஒளிபரப்பாகியதால், ரசிகர்கள் பலரும் சஞ்சீவ் கோயங்காவை பொளந்து கட்டி வருகின்றனர். இவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வருகின்றனர்.
இதனிடையே கேஎல் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், லக்னோ அணியால் கேஎல் ராகுல் தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை என்றும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின், லக்னோ அணி அடுத்ததாக டெல்லி அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
அதேபோல் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் அத்துமீறலுக்கு பின் கேஎல் ராகுல் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கேஎல் ராகுலுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் கிரிக்கெட் வீரர் பேசுகையில், நேற்றைய ஆட்டத்திற்கு பின் கேஎல் ராகுல் ஓய்வில் தான் இருக்கிறார்.
இதுவரை எந்த பயிற்சியிலும் ஈடுபடவில்லை. அதேபோல் யாரிடமும் பேசாமல் கேஎல் ராகுல் அமைதியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த போட்டிக்கு முன்பாகவே கேஎல் ராகுல் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கேஎல் ராகுல் கடைசி 2 போட்டியில் விளையாடுவதும் சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது.