ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை, 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஐதராபாத் அணி சேஸ் செய்தது.

இதன் காரணமாக லக்னோ அணி 6வது தோல்வியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் லக்னோ அணி அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நெட் ரன் ரேட் மோசமாக அடி வாங்கியுள்ள நிலையில், லக்னோ அணி மீண்டெழுவது கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், சொல்வதற்கு எந்த வார்த்தைகளும் இல்லை. இதுபோன்ற பேட்டிங்கை டிவியில் பார்த்திருக்கிறேன். நிச்சயம் இது அசாத்தியமான பேட்டிங் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இருவரும் அடித்த அத்தனை ஷாட்களும் மிடில் பேட்டில் அடித்து பறக்கியது. சிக்சர்கள் அடிப்பதற்கு நிச்சயம் கடுமையாக பயிற்சி செய்திருக்கிறார்கள்.
இந்த பிட்சை கணிப்பதற்கான அவகாசத்தை கூட அவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. 2வது பேட்டிங்கின் போது பிட்ச் எப்படி இருந்தது என்று யோசிப்பதற்கு முன்பே ஆட்டம் முடிந்துவிட்டது. முதல் பந்தில் இருந்தே அடிக்க தொடங்கியதால், அவர்களை தடுப்பது எளிதாக இல்லை. தோல்வியடையும் போது சில முடிவுகள் குறித்த கேள்விகள் நிச்சயம் எழும். நாங்கள் 40 முதல் 50 ரன்கள் வரை குறைவாக எடுத்ததாக நினைத்தேன்.
பவர் பிளேவில் நாங்கள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த போது, அடுத்த மீண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியில் பதோனி மற்றும் பூரன் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் நாங்கள் 240 ரன்கள் சேர்த்திருந்தாலும், ஐதராபாத் அணி எளிதாக சேஸிங் செய்திருக்கும் என்றே நினைப்பதாக தெரிவித்துள்ளார்.