ஐதராபாத் : லக்னோ அணியின் க்ருனால் பாண்டியாவை ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடியாக ரன் அவுட் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஐதராபாத்தில் நேற்று கன மழை பெய்ததால், பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் ஸ்பின்னர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்பட்டது.

இதன்பின் லக்னோ அணி தரப்பில் டி காக் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஐதராபாத் அணி வீரர்களின் ஃபீல்டிங் உச்சத்தில் இருந்தது. புவனேஷ்வர் குமார் பந்தில் சிக்சர் அடிக்க முயன்று டி காக் அடித்த ஷாட்டை, டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த நிதிஷ் ரெட்டி, அசாத்தியமாக கேட்ச் பிடித்து மிரட்டினார்.
அதேபோல் ஸ்டாய்னிஸ் அடித்த பந்தை டைவ் அடித்து சன்விர் சிங் தரமான கேட்சை பிடித்தார். இதனால் ஐதராபாத் அணி ஃபீல்டிங் மூலம் லக்னோ அணியை எளிதாக கட்டுப்படுத்தியது. இதனைவிடவும் உச்சமாக கேப்டன் பாட் கம்மின்ஸ் தரமான சம்பவத்தை செய்துள்ளார். லக்னோ அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால், உடனடியாக க்ருனால் பாண்டியாவை பேட்டிங் செய்ய களமிறக்கியது.
அவரும் தேவைக்கேற்ப சில சிக்சர்களை விளாசி சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த போது, மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த பாட் கம்மின்ஸ் கையில் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன்னை எடுக்க ஓடினார். இதனை சரியாக கணித்த பாட் கம்மின்ஸ், பந்தை பிடித்த அடுத்த நொடியே ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்தார்.
அது சரியாக பவுலர் எண்டில் இருந்த மிடில் ஸ்டம்பை தட்டி தூக்கியது. இதனை மைதானத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், புருவத்தை உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பிறந்தநாளன்று கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் ஃபீல்டிங்கை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.