ஐதராபாத் : ஒரு சீசனில் அதிக சிக்சர்களை விளாசிய அணி என்ற சிஎஸ்கே அணியின் சாதனையை ஐதராபாத் அணி முறியடித்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி நிர்ணயத்த 166 ரன்கள் என்ற இலக்கை, வெறும் 9.4 ஓவர்களில் ஐதராபாத் அணி எட்டியது. அதிரடியாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 75 ரன்களையும் விளாசினர்.

இதன் மூலமாக ஐதராபாத் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 10 ஓவர்களில் அதிக ரன்களை விளாசிய அணி, 100 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 9.4 ஓவர்களில் எட்டிய அணி என்று பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வெற்றியின் மூலமாக ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் நிலை உருவாகியுள்ளது.
இந்த போட்டியில் ஐதராபாத் அணி மொத்தமாக 14 சிக்சர்களை விளாசியது. இதன் மூலமாக இந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி மொத்தமாக 146 சிக்சர்களை விளாசியதன் மூலமாக, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி 145 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது.
தற்போது சிஎஸ்கே அணியின் சாதனையை ஐதராபாத் அணி முறியடித்துள்ளது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் 2019ஆம் ஆண்டு 143 சிக்சர்களை விளாசிய கேகேஆர் அணியும், 2016ஆம் ஆண்டு 142 சிக்சர்களை விளாசிய ஆர்சிபி அணி 4வது இடத்திலும், 2023ஆம் ஆண்டு 140 சிக்சர்களை விளாசிய மும்பை அணி 5வது இடத்திலும் உள்ளன.
அதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் ஆயிரம் சிக்சர்களுக்கு மேல் விளாசப்பட்டுள்ளது. கடந்த சீசனில் 67 போட்டியில் 1000 சிக்சர்கள் என்ற எண்ணிக்கை எட்டப்பட்ட நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் 57 போட்டிகளிலேயே ஆயிரம் சிக்சர்கள் என்ற எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.