ஹைதராபாத் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தனது அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை கலங்க வைத்து 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வரலாற்றில் இதுவே அதிவேக அரைசதம் ஆகும். இந்த சாதனையை ட்ராவிஸ் ஹெட் செய்து முடித்த 22 நிமிடங்களில் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அந்த சாதனையை முறியடித்தார்.

அதிவேக அரைசதம் அடிப்பதெல்லாம் ஏதோ சிறுபிள்ளை விளையாட்டு போல இருவரும் போட்டி போட்டு சிக்ஸ், ஃபோர் அடித்து அரைசதம் கடந்தனர். இந்த இரண்டு சாதனையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்ததை அடுத்து அந்த அணி வீரர்கள் கதிகலங்கிப் போய் நின்றனர்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி அடிக்க முயன்றார். அவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதுவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அடித்த அதிவே வேக அரைசதமாக இருந்தது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதமாக இருந்தது. இரவு 8.02 மணிக்கு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அதன் பின் 8.24 மணிக்கு அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் அரைசதம் அடித்து அந்த இரண்டு சாதனைகளையும் முறியடித்தார். வெறும் 22 நிமிடங்களில் ஒரு பெரிய சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்தார். ட்ராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அவர்கள் சென்ற பின் கிளாசன் தன் பங்கிற்கு வெளுத்தார். அவர் 34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிரடி ஆட்டம் ஆடியதால் இந்தப் போட்டி ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக மாறியது.