ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் விட்டுக் கொடுத்த மும்பை அணி, அடுத்து சேஸிங் செய்த போது ஒரு கட்டத்தில் தேவைப்படும் ரன் ரேட்டை விட கூடுதல் ரன்கள் சேர்த்து இருந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியா செய்த சொதப்பலால் அந்த அணி வெற்றிக்கு அருகே சென்று பின் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பந்துவீச்சின் போது கேப்டன்சியில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா அடுத்து பேட்ஸ்மேனாகவும் சரியாக செயல்படவில்லை என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பங்கேற்றுள்ளது. முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து கடும் விமர்சனம் இருக்கும் நிலையில் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்து இருந்தது.
இந்த நிலையில் அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் குவித்த நிலையில், பும்ரா முதல் 10 ஓவர்களில் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசி இருந்தார். பும்ரா தனது 2வது ஓவரை வீசுவதற்குள் சன்ரைசர்ஸ் அணி 12 ஓவர்களில் 173 ரன்களை குவித்து விட்டது. 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் அணி.
இத்தனை பெரிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்யாது என நினைத்த போது ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, நமன் திர் என முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இலக்கை நோக்கி வேகமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
நமன் திர் ஆட்டமிழந்த பின் 11வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார் ஹர்திக் பாண்டியா. அவர் இயல்பிலேயே அதிரடி பேட்ஸ்மேன் என்பதால் சிக்ஸராக அடித்துத் தள்ளி மும்பை அணியை வெற்றி பெற வைக்கப் போகிறார் என நினைத்த நிலையில் 20 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் ஸ்ட்ரைக் ரேட் 120 மட்டுமே. அதனாலேயே அவருக்கு பின் பேட்டிங் செய்ய வந்த டிம் டேவிட்டுக்கு அழுத்தம் அதிகரித்து, அவராலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டை தொட முடியாமல் போனது. டிம் டேவிட் 22 பந்துகளில் 42 ரன்கள் குவித்து தன்னால் இயன்ற போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
இப்படி மும்பை அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்திருக்க, ஹர்திக் பாண்டியா மட்டுமே 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் எடுத்து அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பாண்டியாவின் நிதான பேட்டிங் தான் காரணம் என ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.