ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இந்தப் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இங்கு ரோஹித் சர்மாவுக்கு அதிக ரசிகர்கள் உண்டு.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை ரோஹித் சர்மா ரசிகர்கள் விரும்பவில்லை. அகமதாபாத்தில் நடந்த மும்பை அணியின் முதல் போட்டியிலேயே ஹர்திக் பாண்டியா டாஸ் போட வந்த போது கடும் கோஷம் கிளம்பியது.

இதை அடுத்து ஹைதராபாத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என கருதப்பட்டது. அதிலும் ரோஹித் சர்மாவுக்கு அங்கு ரசிகர்கள் அதிகம். ரோஹித் சர்மா தனது ஐபிஎல் பயணத்தை ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து தான் தொடங்கினார். அந்த அணி 2009 ஐபிஎல் கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதை கணித்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்து இது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பிடம் கூறி இருந்தது. பொதுவாகவே ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் காவல்துறை பாதுகாப்பு அளிக்கும்.
இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி மோதிய ஐபிஎல் போட்டிக்கு 2800 காவலர்கள் பாதுகாப்பு அளித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி பயந்தது போலவே போட்டி துவங்கும் போதே ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என கோஷம் எழுப்பத் துவங்கினர். அடுத்து ஹர்திக் பாண்டியா டாஸ் போட வந்த போது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதை அடுத்து மைதானத்துக்கு உள்ளே அதிக அளவில் காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை மிரள வைத்தது. 15 ஓவர்களில் எல்லாம் 200 ரன்களை கடந்தது சன்ரைசர்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவை தவிர எந்த பந்துவீச்சாளராலும் ரன் கொடுப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.