ஹைதராபாத் : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மிக தாமதமாக அதை புரிந்து கொண்டுள்ளது. இப்படியே போனால் 2024 ஐபிஎல் தொடரின் முடிவில் தங்களுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதை புரிந்து கொண்ட அந்த அணி முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் இன்று (புதன் கிழமை) ஆட உள்ளது. இந்தப் போட்டிக்கான விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் ஹர்திக் பாண்டியா புகைப்படம் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக மத்தியில் ரோஹித் சர்மா புகைப்படமும், அவருக்கு இரண்டு பக்கமும் பும்ரா மற்றும் டெவால்ட் ப்ரீவிஸ் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம், கேப்டன் ஹர்திக் பாண்டியாவை விளம்பரங்களில் புறக்கணிக்க துவங்கி இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகர்கள் மட்டுமே ஹர்திக் பாண்டியாவை எதிர்ப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் பாண்டியா பிறந்த மண்ணான குஜராத்தை சேர்ந்த ஐபிஎல் அணியை விட்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதால் அந்த மாநில மக்களும் அவர் மீது கோபத்தில் இருந்தனர். அவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அது மட்டுமின்றி போட்டியில் குஜராத் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தது. இதை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. அந்தப் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா மற்றும் பும்ரா வீரர்கள் அறையில் நீண்ட நேரம் தனியாக பேசிய வீடியோவும் வெளியானது. இதை அடுத்து அந்த அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமே ஹர்திக் பாண்டியாவை புறக்கணிக்கத் துவங்கி இருக்கிறது.