ஐதராபாத் : ஆர்சிபி அணிக்கு சொந்த மைதானமான சின்னச்சாமி மைதானம் தான் எமன் என்று அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த ஆர்சிபி, ஒரு வழியாக வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்திருந்தது.

இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த வெற்றியால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஆர்சிபி வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இதன் காரணமாக ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் தக்க வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் வெல்வதுடன், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்தே ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.
இந்த வெற்றி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், கடந்த 2 போட்டிகளும் நாங்கள் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம். ஐதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 260 ரன்கள் வரை அருகில் வந்தோம். அதேபோல் கேகேஆர் அணிக்கு எதிராக ஒரு ரன்னில் தோல்வியடைந்தோம். இருந்தாலும் ஆர்சிபி அணி வீரர்கள் நம்பிக்கை பெறுவதற்கு வெற்றி அவசிய தேவையாக இருந்தது.
மனதளவில் நம்பிக்கை கிடைக்க நிச்சயம் அணியினரின் போராட்டம் முக்கியமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் பலம் வாய்ந்தது. அதனால் போட்டியும் கடினமானது. 100 சதவிகித போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், நிச்சயம் தோல்வி தான். இப்போது பேட்ஸ்மேன்கள் இணைந்து ரன்களை சேர்க்க தொடங்கியுள்ளோம். முதல் பாதியில் விராட் கோலி மட்டுமே ரன்களை சேர்த்து வந்தார்.
தற்போது கேமரூன் க்ரீன் ரன்களை சேர்க்க தொடங்கியுள்ளார். ஆர்சிபி அணிக்கு சின்னச்சாமி மைதானம் எப்போதுமே தலைவலியாக இருந்துள்ளது. அங்கு பவுலிங் செய்வது தான் மிகவும் கடினமான காரியம். அங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று சில முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் கடினமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.