ஐதராபாத் : ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி ஆர்சிபி பவுலர்கள் அசத்தியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் ஐதராபாத் - ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 51 ரன்களும், ரஜத் பட்டிதர் 20 பந்துகளில் 50 ரன்களும் விளாசினர். அதேபோல் ஐதராபாத் அணி தரப்பில் உனாத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

207 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவருக்குமே இந்த இலக்கு போதாது என்று பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த ஐபிஎல் சீசனில் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் பவர் பிளே ஓவர்களிலேயே 125 ரன்களை விளாசி தள்ளினர். இதனால் ஆர்சிபி பவுலர்கள் ஐதராபாத் பேட்ஸ்மேன்களை எப்படி கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 200 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒரேயொரு முறை மட்டுமே வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும் தொடக்கம் கொடுக்க, ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை ஜாக்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ட்ராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து யாஷ் தயாள் வீசிய 4வது ஓவரில் அபிஷேக் சர்மா சிக்சர் அடிக்க முயன்று 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இரு நட்சத்திர தொடக்க வீரர்களும் ஆட்டமிழந்ததால், மைதானத்தில் இருந்த ஐதராபாத் அணி ரசிகர்கள் மொத்தமாக அமைதியாகினர்.
ஸ்பின்னர்களுக்கு திணறி வந்த ட்ராவிஸ் ஹெட்டை சரியாக ஸ்பின்னரை வைத்தும், வேகப்பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்வதற்கு கொஞ்சம் தடுமாறிய அபிஷேக் சர்மாவை யாஷ் தயாளின் வேகத்தை வைத்தும் ஆர்சிபி அணி முடித்து கட்டியுள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.