ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களும், ரஜத் பட்டிதர் 20 பந்துகளில் 50 ரன்களும், கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்களும் விளாசினர்.

இந்த போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் மீண்டும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சீசனில் விராட் கோலி சிறப்பாக ரன்களை குவித்தாலும், அவரின் ஸ்ட்ரைக் ரேட் அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பவர் பிளே ஓவர்களில் 18 பந்துகளில் 32 ரன்களை விளாசிய விராட், மிடில் ஓவரில் 23 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் விராட் கோலி 250 ஸ்ட்ரைக் ரேட்டில் தொடங்கிய போதும், கடைசியாக வெறும் 118 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டில் தான் முடித்துள்ளார். அதிலும் விராட் கோலி விளையாடிய கடைசி 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களில் விராட் கோலி 7 அரைசதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த ஐபிஎல் தொடரில் மிடில் ஓவர்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 123.28ஆக மட்டுமே உள்ளது. இந்த பட்டியலில் விராட் கோலிக்கு மேல் ஸ்ரேயாஸ் ஐயர் 119.09 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். இவரை விடவும் கேஎல் ராகுல், சாய் சுதர்சன் உள்ளிட்டோர் கூட நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகின்றனர்.
இதனால் விராட் கோலி டி20 கிரிக்கெட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களை வெளுக்கும் விராட் கோலி, ஸ்பின்னர்கள் வந்தாலே பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார். இன்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் அதே டெக்னிக்கை பயன்படுத்தியே விராட் கோலியை கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.