ஐதராபாத் : ஆர்சிபி அணி விளையாடவுள்ள 6 போட்டிகளிலும் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்று நட்சத்திர வீரர் வில் ஜாக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 16 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் ஈ சாலா நம்தே என்று நம்பிக்கையாக சொல்லி வரும் ஆர்சிபி ரசிகர்கள், தொடர்ந்து சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 17வது சீசனிலாவது ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சீசனை பொறுத்தவரை ஆர்சிபி அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 7 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தற்போது தொடர்ச்சியாக 6 போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளது.
இதற்காக ஆர்சிபி அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி வீரர் வில் ஜாக்ஸ் பேசுகையில், தற்போது ஆர்சிபி அணி பவுலர்கள் அனைவருமே பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறோம்.
அது கடந்த போட்டியில் சரியாக செயல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் அதனை செய்ய விரும்புகிறோம். ஆர்சிபி அணி இந்த நிலைமையில் இருந்து கூட சில போட்டிகளை அடுத்தடுத்த வென்றால், பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம். எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடைசி 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலை இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி அடுத்தடுத்து 4 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே ஆர்சிபி அணி சரியான பிளேயிங் லெவனை கண்டறிந்துள்ள நிலையில், வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.