ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் மோசமான பவுலிங் அட்டாக்கை வைத்திருக்கும் அணி என்றால் அது ஆர்சிபி தான் என பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதிகள் காரணமாக இந்த சீசனில் சாதாரணமாக ஒவ்வொரு அணிகளும் 200 ரன்களை எளிதாக கடந்துவிடுகின்றனர். அதில் ஐதராபாத் அணி மிகவும் எளிதாக 3 முறை 250 ரன்களுக்கு மேல் விளாசி இருக்கிறது. இதற்கு இம்பேக்ட் பிளேயர் விதிகள் காரணம் என்றாலும், பேட்ஸ்மேன்களின் திறமையும் அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

கடைசியாக ஐபிஎல் தொடரில் நடைபெற்ற 12 போட்டிகளில் 12 முறை 200 ரன்களுக்கு மேல் விளாசப்பட்டிருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டி என்பதை கடந்து பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், இந்த காலத்தில் நான் கிரிக்கெட் விளையாடவில்லை என்று மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனென்றால் 20 ஓவர்களில் சாதாரணமாக 270 ரன்களை குவிக்கிறார்கள்.
50 ஓவர்களில் இதுபோன்ற ஸ்கோர் 450 முதல் 500 ரன்களுக்கு சமமாகும். ஏதோ ஒருமுறை 270 ரன்கள் குவிக்கப்பட்டால் விட்டுவிடலாம். ஆனால் சில நாட்களிலேயே 3 முறை நடந்திருக்கிறது. இது ஐதராபாத் அணியின் வலிமையை காட்டுகிறது. என்னை பொறுத்தவரை 5 ஓவர்களுக்கு 100 ரன்கள் அடிப்பது மிகப்பெரிய குற்றமாகும். ஃபுல் டாஸாக பந்தை வீசினாலும், இப்படி விளாசுவது சாதாரணம் கிடையாது.
பவுலர்களுக்கு பணம் கொடுத்து அடி வாங்க கூட்டி வருகிறார்கள். டி20 கிரிக்கெட் வடிவத்தில் பவுலர்களை கண்டால் பாவமாக உள்ளது. ஐதராபாத் அணியின் கிளாசன் தான் இப்போது எனக்கு மிகவும் பிடித்த பவுலர். அவர் சிக்ஸ் அடிக்கும் மான்ஸ்டராக இருக்கிறார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறந்த பவுலிங் அட்டாக்கை எந்த அணி வைத்திருக்கிறது என்று சொல்வது கடினம்.
ஆனால் நிச்சயம் ஆர்சிபி அணியின் பவுலிங் அட்டாக் சிறந்த அட்டாக் அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலர்களான சிராஜ், ஃபெர்குசன், யாஷ் தயாள், கரண் சர்மா, விஜயகுமார் வைஷாக், மேக்ஸ்வெல், மயங்க் டாகர், டாப்லீ என்று எந்த பவுலரும் சொல்லிக் கொள்ளும்படி பவுலிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.