ஐதராபாத் : ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்லவில்லை என்றாலும், ஆரஞ்ச் கேப் ரேசில் விராட் கோலி முதலிடத்தில் முடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 41வது போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். கோப்பையை வென்ற அணிகளுக்கு எதிராகவே முதல் பேட்டிங் ஆடி ஐதராபாத் அணி பொளந்து கட்டிய நிலையில், ஆர்சிபி அணி இம்முறை முதல் பேட்டிங் தேர்வு செய்துள்ளது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தால், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதி செய்யப்படும். ஏனென்றால் இதுவரை ஆர்சிபி அணி விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெல்வதோடு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்தே ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு தெரிய வரும்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்கிறதோ, இல்லையோ.. என்னை பொறுத்தவரை விராட் கோலி ஆரஞ்ச் கேப் ரேசில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் அருகில் வேறு எந்த வீரரையும் வரவிடக் கூடாது. ஆர்சிபி அணி தோல்வியடைந்தாலும், விராட் கோலி நல்ல மனநிலையில் பேட்டிங் செய்வதை தொடர வேண்டும்.
தற்போது விராட் கோலி வேற லெவலில் பேட்டிங் செய்து வருகிறார். அதேபோல் அவரின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து யாரும் எந்த கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்ப தேவையில்லை. ஏனென்றால் குறைந்தது 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரை விராட் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் விராட் கோலி 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 379 ரன்களை குவித்துள்ளார். ஆரஞ்ச் கேப் ரேசில் விராட் கோலி முதலிடத்தில் உள்ள நிலையில், 2வது இடத்தில் 349 ரன்களுடன் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 342 ரன்களை விளாசி இருக்கிறார்.