பட்டிதரால் தப்பித்த ஆர்சிபி.. ட்விஸ்ட் கொடுத்த உனாத்கட்.. ஐதராபாத் அணிக்கு சவாலான இலக்கு!
ஐதராபாத் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற 207 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அபிஷேக் சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து விராட் கோலி அதிரடியாக தொடங்கினார். அந்த ஓவரில் மட்டும் 10 ரன்கள் விளாசப்பட்டது.

தொடர்ந்து 2வது ஓவரில் டூ பிளசிஸ் 3 பவுண்டரிகள் விளாசி அதிரடியாக தொடங்க, கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் இருவருமே பொளந்து கட்டி 19 ரன்களை விளாசினர். இதன் காரணமாக உடனடியாக நடராஜன் அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் 5வது பந்தில் நடராஜன் வீசிய ஸ்லோயர் பவுன்சர் வீச, அதனை அப்பர் கட் அடிக்க முயன்று டூ பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் ஆர்சிபி அணி 6 ஓவர்கள் முடிவில் 61 ரன்களை சேர்த்திருந்தது. பின்னர் அதிரடியாக ஆட முயன்ற ஜாக்ஸ் 6 ரன்களில் வெளியேற, உடனடியாக ரஜத் பட்டிதர் களம் புகுந்தார். இவரும் விராட் கோலியும் இணைந்து ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சரை விளாச, ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனால் 10 ஓவர்களில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 94 ரன்களாக இருந்தது.
இந்த நிலையில் மார்க்கண்டே வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட்ட பட்டிதர், 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து உனாத்கட்டை அட்டாக் செய்ய முயன்று 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து பட்டிதர் வெளியேற, கேமரூன் க்ரீன் வந்தார். தொடர்ந்து விராட் கோலி 37 பந்துகளில் அரைசதத்தை எட்ட, ஆர்சிபி அணி 14 ஓவர்கள் முடிவில் 136 ரன்களை சேர்த்திருந்தது.
இதன்பின் கியரை மாற்ற முயன்ற விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேற, தொடர்ந்து வந்த லோம்ரோரும் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஃபினிஷிங் பொறுப்பு தினேஷ் கார்த்திக் - க்ரீன் கூட்டணியின் கைகளுக்கு வந்தது. 18 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 179 ரன்கள் சேர்த்திருந்தது.
பின்னர் கம்மின்ஸ் வீசிய 19வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதேபோல் தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் கடைசி ஓவரை வீச நடராஜன் வந்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பவுலிங் செய்த உனாத்கட் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications