ஐதராபாத் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 25 பந்திகளில் 41 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில், ஐதராபாத் அணி பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பவுலிங் செய்தனர். குறிப்பாக புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் மூவரும் அசத்திவிட்டனர். இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலமாக நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளார். இவருக்கு பின் பும்ரா 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.
முதல்முறையாக நடராஜன் தலைக்கு பர்பிள் கேப் வந்தது. ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ட்ராவிஸ் ஹெட் நடராஜனுக்கு பர்பிள் கேப்பை அணிவித்தார். அதன்பின் மைதானத்தில் இருந்த தனது மகளை தூக்கி கொண்டாடிய நடராஜன், அப்படியே மகளுடன் சென்று ஐதராபாத் வீரர்களை சந்தித்தார். அப்போது புவனேஷ்வர் குமார் நடராஜன் மகளுடன் ஜாலியாக விளையாடியது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
தமிழக வீரர் ஒருவரின் தலைக்கு பர்பிள் கேப் வந்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் நடராஜனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யாத பிசிசிஐ நிர்வாகிகளுக்கு நடராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.