சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதிபெற்ற நிலையில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. ஐதராபாத் அணியில் ஸ்பின்னர்களே இல்லாததால், ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணி 64 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் கண் மூடி திறப்பதற்குள் அடுத்த 37 ரன்களுக்கும் 5 விக்கெட்டை பறி கொடுத்தது. குறிப்பாக ஐதராபாத் அணியின் பார்ட் டைம் ஸ்பின்னரான ஷாபாஸ் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் அணியின் இரு ஜாம்பவான் ஸ்பின்னர்களால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் தடுமாறிய நிலையில், ஐதராபாத் அணியின் பார்ட் டைம் ஸ்பின்னர்கள் 9 ஓவர்களில் 57 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். ஆடுகளத்தில் ஸ்பின் இருப்பதை அறிந்து கம்மின்ஸ் 2 ஸ்பின்னர்களையும் சிறப்பாக பயன்படுத்தி வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலமாக 2018ஆம் ஆண்டுக்கு பின் ஐதராபாத் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இதன் மூலமாக 3வது முறையாக ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த சில சீசன்களாக ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது, மைதானத்தில் அமர்ந்து பார்த்த அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சோகமாக இருப்பார்.
ஆனால் இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் ஸ்பின்னர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய போது, உற்சாகத்தில் துள்ளி குதித்தார். அதிலும் ஹெட்மயர் விக்கெட்டை வீழ்த்திய போது, அவரின் தந்தை கலாநிதி மாறனை பார்த்து விரல்களால் சைகை செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். காவ்யா மாறனின் கொண்டாட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.