சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியின் ஆவேஷ் கான் மிரட்டலாக பவுலிங் செய்துள்ளார்.
ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2வது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை சேர்த்துள்ளது. அதிகபட்சமாக கிளாசன் 34 பந்துகளில் 50 ரன்களும், ராகுல் த்ரிப்பாட்டி 15 பந்துகளில் 37 ரன்களும் விளாசினர்.

ராஜஸ்தான் அணி தரப்பில் இளம் வீரர் ஆவேஷ் கான் மற்றும் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களின் சொர்க்க பூமியாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் அணியின் அனுபவம் வாய்ந்த இரு நட்சத்திர ஸ்பின்னர்களும் இணைந்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.
4 ஓவர்களை வீசிய அஸ்வின் 43 ரன்களும், சாஹல் 34 ரன்களும் விட்டுக் கொடுத்தனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை விடவும் கூடுதல் ஆச்சரியம் ஆவேஷ் கானின் அற்புதமான பவுலிங் தான். ஏனென்றால் ஆவேஷ் கான் பவுலிங் செய்தாலே ரன்களை அதிகமாக விட்டுக் கொடுப்பார் என்று ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்று முதல் ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்த நிலையில், ஆவேஷ் கான் வீசிய 2வது ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நிதீஷ் ரெட்டி மற்றும் அப்துல் சமத் விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் நிதீஷ் ரெட்டி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்த போது, அதற்கேற்ப ஃபீல்ட் செட் செய்து விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து ஆவேஷ் கானின் 3வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
பின்னர் கடைசி ஓவரை வீச ஆவேஷ் கான் வந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஷாபாஸ் அஹ்மத் விக்கெட்டையும் வீழ்த்தினார். 4 ஓவர்களில் மொத்தமாக 27 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 11 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டை வீழ்த்தினார். ஆவேஷ் கானின் பவுலிங்கால் உற்சாகமடைந்த பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட், களத்திலேயே அவரை பாராட்டி சென்றார்.