சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான பேனர் என்று கம்மின்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் முகங்களை கொண்டு பேனர் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் குவாலிஃபையர் முதல் போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு நடக்கும் குவாலிஃபையர் 2வது போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி மே 26ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. தற்போது குவாலிஃபையர் 2வது போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கான பேனர் அமைக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் ஒரு பக்கம் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முகமும், மற்றொரு பக்கம் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் முகமும் உள்ளது.
குவாலிஃபையர் 2வது போட்டிக்கு முன்பாகவே இப்படி பேனர் அமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடக்கிறதா அல்லது எல்லாமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஸ்கிரிப்ட் தானா என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஐபிஎல் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி நடக்கவுள்ளது.
இதனால் தயாரிப்பு பணிகள் சேப்பாக்கம் மைதான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாகவே இன்றே பேனர் அமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றால், சஞ்சு சாம்சனின் புகைப்படம் பேனரில் அமைக்கப்படும். கடந்த ஆண்டு கூட ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாகவே அகமதாபாத் மைதானத்தில் "சாம்பியன்ஸ் குஜராத்" என்று எல்இடி போர்டில் டெஸ்ட் செய்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.