சென்னை : ஷாபாஸ் அஹ்மத்தை இம்பேக்ட் பிளேயராக களமிறக்க வேண்டும் என்ற ஐடியாவை கொடுத்தது யார் என்று ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
2018ஆம் ஆண்டுக்கு பின் 3வது முறையாக ஐதராபாத் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ஸ்பின்னர்களை பெரிதாக பயன்படுத்தாத ஐதராபாத் அணி, குவாலிஃபையர் 2வது போட்டியை பார்ட் டைம் ஸ்பின்னர்களை வைத்து வென்றுள்ளது.

சிறப்பாக விளையாடிய ஷாபாஸ் அஹ்மத் பேட்டிங்கில் 18 ரன்களும், பவுலிங்கில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இதனால் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ஷாபாஸ் அஹ்மத்துக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இந்த வெற்றிக்கு பின் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், இந்த சீசன் முழுக்கவே எங்களின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்துள்ளார்கள்.
எங்கள் அணிக்குள் சிறந்த வைப் ஒன்று உள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தில் இறுதிப்போட்டியில் விளையாடுவதே இலக்காக இருந்தது. இப்போது அதனை தொட்டுவிட்டோம். எங்கள் அணியின் பலம் பேட்டிங் என்று நன்றாக அறிவோம். ஆனால் ஐதராபாத் அணியில் இருக்கும் அனுபவத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஏனென்றால் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனாத்கட் ஆகியோரை கொண்டிருப்பது ஒவ்வொரு அணியின் கனவு.
அவர்கள் மூவரும் எனது பணியை எளிதாக்குகிறார்கள். அதேபோல் இம்பேக்ட் பிளேயராக ஷாபாஸ் அஹ்மத்தை கொண்டு வந்த ஐடியா பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உடையது தான். இடதுகை ஸ்பின்னரான அவருக்கு எப்போதும் இடதுகை ஸ்பின்னர்கள் அதிகம் விளையாட வேண்டும். அபிஷேக் சர்மாவின் பவுலிங் எங்களுக்கு ஆச்சரியம் தான். சாம்சன், ரியான் பராக்இருவரும் வலதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், ஒருவரை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம்.
அதனை அபிஷேக் சர்மா கச்சிதமாக செய்து கொடுத்தார். இரு ஸ்பின்னர்களும் பவுலிங் மூலமாக வெற்றியை கொண்டு வந்துவிட்டார்கள். 176 ரன்கள் இலக்கை டிஃபெண்ட் செய்வது கொஞ்சம் கடினமானது தான். ஆனால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தோம். அது நடந்துவிட்டது. எப்போதும் வெவ்வேறு பிட்ச், சூழலில் விளையாடுவதை விரும்ப மாட்டேன். ஆனால் இந்த சீசனில் எங்களின் வெற்றிக்கு பின் 60 முதல் 70 பேர் உழைக்கிறார்கள். இன்னும் ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்துள்ளார்.