சென்னை : ஐபிஎல் தொடரின் பெஸ்ட் ஓனர் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தான் என்று அபிஷேக் சர்மாவின் சகோதரி பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 3 சீசன்களுக்கு பின் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் குவாலிஃபையர் முதல் போட்டியில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கவுள்ள போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிக ரன்களை குவிக்க வேண்டும். ஏனென்றால் சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஸ்பின்னர்களை வெளுக்கும் திறமையை கொண்டு அபிஷேக் சர்மா அதிக ரன்களை சேர்க்க வேண்டும்.
இந்த சீசனில் அபிஷேக் சர்மா 14 போட்டிகளில் விளையாடி 470 ரன்களை விளாசி இருக்கிறார். இவருக்கு ஆதரவாக அவரின் சகோதரி கோமல் சர்மா உடன் பயணித்து வருகிறார். இதனால் கோமல் சர்மாவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோமல் சர்மா பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கோமல் சர்மா, கிரிக்கெட்டை ரசிக்கிறார்.. சொந்த அணியை ஊக்குவிக்கிறார்.. அதேபோல் எதிரணியையும் பாராட்டுகிறார்.. காவ்யா மாறன் தான் சிறந்த ஓனர் என்று பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் அணிகளுக்கு இடையிலான போட்டியை விடவும் உரிமையாளர்களுக்கு இடையிலான போட்டியும் அதிகரித்துள்ளது. ஷாருக்கான், நீடா அம்பானி, ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரை அந்தந்த அணியின் கேப்டன்கள் சிறந்த உரிமையாளர்கள் என்று கொண்டாடி வரும் நிலையில், காவ்யா மாறனும் ரேஸில் இணைந்துள்ளார்.