சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் குவாலிஃபையர் 2வது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கோலர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்த ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடங்க, மறுமுனையில் கோலார் பந்தை அடிக்க முடியாமல் திணறினார். முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்த்த நிலையில், கோலர் 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் சஞ்சு சாம்சன் - ஜெய்ஸ்வால் கூட்டணி இணைந்து அதிரடியில் வெளுத்து கட்டினர். அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய 6வது ஓவரில் 19 ரன்கள் விளாசப்பட்டது.
இதனால் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 51 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் 8வது ஓவரை வீச ஷாபாஸ் அஹ்மத் வந்தார் அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடிக்க முயன்று 42 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் பார்ட் டைம் ஸ்பின்னரான அபிஷேக் சர்மாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் கம்மின்ஸ். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறியதால், கம்மின்ஸ் தைரியமாக அபிஷேக் சர்மாவின் கைகளில் பந்தை கொடுத்தார்.
இதனையறிந்த சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மாவை அட்டாக் செய்ய நினைத்து எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க பேட்டை ஓங்கினார். அந்த பந்து நேராக மார்க்ரம் கைகளில் சென்று விழுந்தது. இதனால் சஞ்சு சாம்சன் 11 பந்துகளில் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சீசனில் ஒரேயொரு முறை மட்டுமே ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்த சஞ்சு சாம்சன், பார்ட் டைம் ஸ்பின்னரின் பந்தில் ஆட்டமிழந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் சஞ்சு சாம்சன் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்த வரலாற்றை ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பார்ட் டைம் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்து சஞ்சு சாம்சன் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.