ஐதராபாத் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் வென்றதை மைதானத்தில் இருந்த அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் துள்ளிக்குதித்து கொண்டாடியது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. ஆர்சிபி மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஐதராபாத் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இதனால் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மைதானத்திற்கு வந்து நேரில் பார்த்தார். காவ்யா மாறன் மைதானத்திற்கு வந்தால், ஐதராபாத் அணியின் முக்கியமான தருணங்களில் கேமரா லென்ஸ் உடனடியாக அவர் பக்கம் திரும்பும். அவர் கொடுக்கும் ரியாக்சன்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும்.
அந்த அளவிற்கு காவ்யா மாறனுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்த நிலையில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்த போது காவ்யா மாறன் பரபரப்பாக காணப்பட்டார். அதிலும் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், கொஞ்சம் சோகமாக இருந்தார். ஆனால் புவனேஷ்வர் வீசிய கடைசி பந்தில் பவல் ஆட்டமிழந்தார்.
இதனால் உற்சாகமாக காவ்யா மாறன், துள்ளிக்குதித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு அருகில் நின்றிருந்த சக நிர்வாகிகள், காவ்யா மாறனுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சீசனில் ஐதராபாத் அணியின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு முறை ஐதராபாத் அணி சொந்த மண்ணில் களமிறங்கும் போதும், ரசிகர்கள் அதிகளவில் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.