சென்னை : ஐதராபாத் அணியின் டாப் ஆர்டரின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் போல்ட் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் போல்ட் முதல் ஓவரை வீசினார்.

ஏற்கனவே தொடர்ச்சியாக 2 போட்டிகளில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் போல்ட் பவுலிங்கை ட்ராவிஸ் ஹெட் கவனமாக எதிர்கொண்டார். முதல் பந்திலேயே ஒரு ரன்னை எடுத்து மறுமுனைக்கு சொல்ல, தொடர்ந்து வந்த அபிஷேக் சர்மா 6,4, 2 என்று விளாச, கடைசி பந்தை கூடுதல் வேகத்துடன் போல்ட் வீசினார். அதனை எதிர்பார்க்காத அபிஷேக் சர்மா, பவுண்டரி அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
பின்னர் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த 3வது ஓவரையும் வீச அழைக்கப்பட்டார் போல்ட். அந்த ஓவரில் த்ரிப்பாட்டி பவுண்டரி அடிக்க, மொத்தமாக 7 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் சந்தீப் சர்மா அட்டாக்கில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் போல்டை அட்டாக்கில் கொண்டு வந்தார் சஞ்சு சாம்சன்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் போல்ட் வீசிய 3வது ஓவரில் தான் டூ பிளசிஸ் விக்கெட் கொடுத்து வெளியேறினார். இதனால் மீண்டும் மேஜிக்கை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் த்ரிப்பாட்டி முதல் பந்திலேயே 6 அடிக்க, 2வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. ஆனால் 3வது பந்தில் வேகத்தை போல்ட் குறைக்க, த்ரிப்பாட்டி 37 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த மார்க்ரமும் கடைசி பந்தில் வெளியேறினார்.
இதனால் ஐதராபாத் அணி 5 ஓவர்களில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வழக்கமாக பவர் பிளே ஓவர்களில் போல்ட் 2 ஓவர்களை மட்டுமே வீசி வந்த நிலையில், கடந்த 2 போட்டிகளாக 3 ஓவர்களை வீச வைத்து சஞ்சு சாம்சன் பயன்படுத்தி வருகிறார். இது ராஜஸ்தான் அணிக்கு சரியான பிரேக் த்ரோவை கொடுத்து வருகிறது.